கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் தரம் குறைந்த 40 பிரதான மருந்து வகைகள் மற்றும் அறுவைசிகிச்சை உபகரண தொகுதிகளை பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கு மருந்து விநியோகப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த வருடத்தில் சந்தேகத்திற்கிடமான நோயாளி மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து, ‘ஒண்டாசெட்ரான்’ உள்ளிட்ட 10 மருந்து வகைகள் ஒரே நேரத்தில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டன.
எனினும், அந்த மருந்து தொகுதிகளின் சர்வதேச தரம் குறித்து தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை இதுவரை எந்தவொரு தெளிவான விளக்கத்தையும் அளிக்கவில்லை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கடந்த காலப்பகுதியில் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாகப் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட 40 மருந்து மற்றும் அறுவைசிகிச்சை உபகரணங்களில் கொலோஸ்டமி அஞ்சியோகிராம் கதீட்டர் , போவிடோன் கதீட்டர் , ஊசிகள், என்பன அடங்குவதாக விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை மருத்துவமனைகளுக்காக இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த மருந்துகளின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக, உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த தரநிலைகளைக் கொண்ட ஆய்வகம் ஒன்றினை நாட்டில் இதுவரை நிறுவுவதற்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை தவறியுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ குற்றம் சாட்டியுள்ளார்.
