தரம் 5ம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நடைபெற்ற நிலையில், இதன் போது தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி பெற்றோர்கள் குழுவொன்று கிரிந்திவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
கம்பஹா- கிரிந்திவெல போகஹவத்த ஜினானந்த ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர், கிரிந்திவெல மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.
இதன்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
விதிமுறைகளின்படி முற்பகல் 11.15 மணிக்கு வழங்கப்பட வேண்டிய வினாத்தாள், தமது பிள்ளைகளுக்கு சுமார் 11.30 மணிக்கே வழங்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதேவேளை, வினாத்தாள் பிற்பகல் 12.15 மணிக்கு மீளப் பெறப்பட்டதாகவும், இதனால் மாணவர்களுக்கு பரீட்சைக்காக வழங்கப்பட்ட நேரத்தில் சுமார் அரை மணி நேரம் குறைந்துள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தமது பிள்ளைகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள பெற்றோர்கள், சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயமான தீர்வை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, கம்பஹா வலயக் கல்வி அலுவலக அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு சென்று பெற்றோருடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அந்தக் கலந்துரையாடலில் தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்காததைத் தொடர்ந்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
