“தற்போதைய அரசி முறையற்ற பொருளாதார முகாமைத்துவம், நுரைச்சோலை நிலக்கரி மோசடியினாலான சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் தன்னிச்சையான சட்ட அமலாக்கங்கள் காரணமாக நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது” என்று ஐக்கிய மக்கள் சக்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பாணந்துறை தொகுதி அமைப்பாளர் நயனக ரங்வெல்ல இந்த விவரங்களை அம்பலப்படுத்தினார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 86 பகுதிகள் காப்பகங்களாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட அறிவிப்பு முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.
எமது கட்சியின் விசேட கள ஆய்வுகளின்படி 26 பகுதிகள் மாத்திரமே இதுவரை வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி குறிப்பிட்ட ஏனைய காப்பகங்கள் எவை மற்றும் அவற்றின் வர்த்தமானி அறிவித்தல் இலக்கங்கள் என்ன என்பதை நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டியது சுற்றுச்சூழல் அமைச்சரினதும் அதிகாரிகளினதும் பொறுப்பாகும்.
யானை வழித்தடங்களை விடுத்து, ஜே.வி.பி.யின் அரசியல் தேவைகளுக்கு ஏற்பவே சில தேவையற்ற பகுதிகள் வர்த்தமானியில் சேர்க்கப்பட்டுள்ளன.
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்தமையால் நாட்டுக்குப் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து இருவேறு வகையான நச்சுச் சாம்பல் வெளியேற்றப்படுவதால் மின் நிலையத்தின் ஆயுட்காலமும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்த நிறுவனத்திடமிருந்து நட்டஈடு வசூலிக்கப்படும் என அரசு கூறினாலும் அது வெறும் நாடகமாகவே உள்ளது.
நாட்டின் பொருளாதாரம் தற்போது பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ரூபாவின் மதிப்பை ஸ்திரப்படுத்துவதற்காக மத்திய வங்கி சுமார் 225 மில்லியன் டொலர்களை அவசரமாகச் சந்தைக்கு விடுவித்த போதிலும் அந்த முயற்சி முற்றாகத் தோல்வியடைந்துள்ளது.
அரசின் பொருளாதாரக் கொள்கை மீதான அவநம்பிக்கை காரணமாக பொருளாதாரம் மேலும் நலிவடைந்துள்ள சூழலில், உலகளாவிய யுத்தச் சூழல் மற்றும் சுற்றுலாத்துறை வீழ்ச்சியால் நாடு மேலும் முடங்கும் அபாயம் உள்ளது.” – என்றார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலே குறித்துப் பேசுகையில் நயனக ரங்வெல்ல பின்வருமாறு குறிப்பிட்டார்:
“ஈஸ்டர் தாக்குதலுக்குக் காரணமான காட்டுமிராண்டிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே உறுதியாக இருக்கின்றது. எனினும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களை அநாகரிகமான முறையில் சித்திரவதை செய்வதையோ, உடல் ரீதியான ஊனங்களை ஏற்படுத்துவதையோ அல்லது பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்படுத்துவதையோ எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டம் அதன் வழியிலேயே கிரமமாக அமல்படுத்தப்பட வேண்டும். கைதிகளுக்கு எதிரான மனிதநேயமற்ற சித்திரவதைகளை சட்ட அமலாக்கப் பிரிவினர் உடனடியாக நிறுத்த வேண்டும்.” – என்றார்,
உலகெங்கிலும் ‘எல் நினோ’ காலநிலை மாற்றம் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ள நிலையில், அதன் தாக்கம் இலங்கைக்கும் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால் நாட்டில் மின்சக்தி மற்றும் உணவுப் பற்றாக்குறை போன்ற பாரிய பிரச்சினைகள் உருவாகலாம் என்பதால், இந்த அவசர நிலையை எதிர்கொள்ள அரசு உடனடியாக முறையான தேசியக் கொள்கையொன்றை வகுத்துச் செயற்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக அவர் கேட்டுக்கொண்டார்.
