25மாவட்ட செயலகங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தேசியக் கட்டமைப்பில் ஒன்றிணைப்பதன் மூலம் தேசிய புத்தாக்கக் களத்தை விருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு தேசிய புத்தாக்க முகவராண்மை நிறுவனம் 25மாவட்டங்களிலும் உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வை நடாத்தி வருகின்றது. கிளிநொச்சி மாவட்ட உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு கிளிநொச்சி மாவட்ட செயலக. திறன் விருத்தி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ் தலைமையில் நடைபெற்ற குறித்த செயலமர்வில்
தேசிய புத்தாக்க முகவராண்மை நிறுவனத்தின் பிரதம அலுவலர் கலாநிதி முதித டி செனரத் யாப்பா, சிரேஸ்ட அலுவலர் திடாசி தஹாநாயக்க உள்ளிட்டோர்.
வளவாளராக கலந்து கொண்டனர்.குறித்த செயலமர்வில், உதவி மாவட்ட செயலாளர் H.சத்தியஜீவிதா,கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர்கள், விதாதா வள நிலைய ஒருங்கிணைப்பாளர்கள்,
தேசிய தொழில் முயற்சி அதிகார சபை உத்தியோகத்தர்[National Enterprise Development Autho (NEDA) Officer],உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,புள்ளிவிபர உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
2019-ஆம் ஆண்டின் 22-ஆம் இலக்க தேசிய புத்தாக்க முகவராண்மைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட தேசிய புத்தாக்க முகவராண்மை (National Innovation Agency (NIA)), இலங்கையில் புத்தாக்கத்தால் உந்தப்படும் பொருளாதார அபிவிருத்தியை வளர்ப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும், எளிதாக்குவதற்கும் அதிகாரம் பெற்ற ஓர் உச்சபட்ச அரசாங்க நிறுவனமாகும்.
தனது தேசிய அதிகார வரம்பின் ஒரு பகுதியாக, நாட்டின் புத்தாக்கச் சூழலமைப்பை வலுப்படுத்தவும், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க முடிவுகளின் வணிகமயமாக்கலை விரைவுபடுத்தவும், NIA ஆனது ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தொழில்துறைகள், தொழில்முனைவோர் மற்றும் அரசாங்க முகமைகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறது.
