Home இலங்கை தொடர் சைக்கிள் திருட்டு ஹெரோயினுடன் சகோதரர்கள் உட்பட நால்வர் கைது

தொடர் சைக்கிள் திருட்டு ஹெரோயினுடன் சகோதரர்கள் உட்பட நால்வர் கைது

0
image

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த துவிச்சக்கரவண்டி (சைக்கிள்) திருட்டுகள் தொடர்பாகத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், போதைப்பொருளுக்கு அடிமையான இரு சகோதரர்கள் உட்பட நால்வரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி  தலைமையில், பல்வேறு குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம். முஸ்தபா   வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

பல்வேறு குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையின்போது, கல்முனைக்குடி செய்லான் வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய சகோதரர்கள் இருவர், 3 திருடப்பட்ட சைக்கிள்கள் மற்றும் ஒரு தொகுதி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், திருடிய 2 சைக்கிள்களை சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் உள்ள பழைய இரும்பு வியாபாரி ஒருவரிடம் தலா 2,400 ரூபாவுக்கு விற்றுள்ளமை தெரியவந்தது. அதேபோல், கல்முனை பகுதியில் வைத்து மற்றொரு சைக்கிளை 1,700 ரூபாவுக்கு வாங்கிய நபரையும் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களையும் பொலிஸார் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Source: https://samugammedia.com/serial-bicycle-thefts-four-arrested-including-brothers-with-heroin-1786344445

NO COMMENTS

Exit mobile version