Home இலங்கை தொண்டைமானாறில் இறந்து மிதக்கும் ஏராளமான மீன்கள்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்

தொண்டைமானாறில் இறந்து மிதக்கும் ஏராளமான மீன்கள்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்

0
image

யாழ்ப்பாணம், தொண்டைமானாறு நன்னீர் அணைக்கட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கடல்நீரேரியில் ஏராளமான மீன்கள் இறந்து மிதப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014, 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இதேபோன்ற சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இவ்வாண்டு ஆகஸ்ட் 1 முதல் 5 ஆம் திகதி வரையிலும் தொடர்ச்சியாக மீன்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர்  பிரதீபா சிவகுமார் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் நேற்று (05) சம்பவ இடத்திற்குச் சென்று நேரடி ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ஆய்வில், கடந்த மாதத்தில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக ஏரியின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளதுடன், நீர் வற்றியதால் உப்புச் செறிவு அதிகரித்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை, நீரில் கரைந்துள்ள ஒட்சிசனின் (Dissolved Oxygen) அளவு மிகவும் குறைந்துள்ளதுடன், வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மை அதிகரித்ததன் விளைவாக நீரின் ஒட்சிசன் ஒடுக்கத் திறன் (Oxidation-Reduction Potential – ORP) எதிர்மறை நிலைக்குச் சென்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மீன்களுக்குத் தேவையான போதிய ஒட்சிசன் கிடைக்காமல், பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும், உலகளவில் நிலவி வரும் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றத்தின் தாக்கமே நீரின் இரசாயன அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த மீன்களின் உயிரிழப்புக்கும் பிரதான காரணமாக இருக்கலாம் என ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக அறிவியல் பரிசோதனைகள் மற்றும் நீர் மாதிரி ஆய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவற்றின் இறுதி முடிவுகளின் பின்னர் விரிவான அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/a-huge-number-of-fish-floating-dead-in-thondaimanaru-shocking-findings-in-the-study-1786010284

NO COMMENTS

Exit mobile version