Home இலங்கை நச்சு இரசாயனம் மூலம் பழங்களைப் பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை!

நச்சு இரசாயனம் மூலம் பழங்களைப் பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை!

0
image

நச்சு இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்திப் பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைப்பதைத் தடுப்பதற்குத் தேவையான புதிய சட்ட ஏற்பாடுகளை விரைவாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சந்தைகளில் வாழைப்பழங்கள், மாம்பழங்கள் மற்றும் பப்பாளிப் பழங்கள் போன்றவற்றை நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்திப் பழுக்க வைத்து விற்பனை செய்வது குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபைக்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

இத்தகைய ஆபத்தான நடைமுறைகள் தற்பொழுது சமூகத்தில் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் கவலை வெளியிட்டார்.

இதனையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்திப் பழங்களைப் பழுக்க வைக்கும் கிடங்குகள் மற்றும் இடங்களை நேரடியாகச் சென்று சோதனையிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

ஏற்கனவே இது தொடர்பாகத் தேவையான விழிப்புணர்வுகள் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

இருப்பினும், லாப நோக்கில் தொடர்ந்து இந்த ஆபத்தான முறையை முன்னெடுத்துச் செல்லும் வியாபாரிகளுக்கு எதிராகத் தயவுதாட்சணியமின்றி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் அமைச்சர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/strict-action-if-fruits-are-ripened-using-chemicals-minister-warns-1784609842

NO COMMENTS

Exit mobile version