Home இலங்கை நல்லூரின் பெருமையை உயர்த்தும் “நல்லூரான் வடக்கு வாசல் வளைவு” திறந்து வைப்பு

நல்லூரின் பெருமையை உயர்த்தும் “நல்லூரான் வடக்கு வாசல் வளைவு” திறந்து வைப்பு

0
image

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் ஆன்மிக மற்றும் கலாசாரப் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்குத் திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார தோரண வாசலான “நல்லூரான் வடக்கு வாசல் வளைவு” இன்று (06) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு நடைபெற்ற விசேட சமய நிகழ்வுகளுடன் இந்த வடக்கு வாசல் வளைவு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, இன்று காலை 10.30 மணியளவில் சட்டநாதர் சிவன் கோவிலில் இருந்து விசேட சமய அனுஷ்டானங்கள் நடைபெற்றன. பின்னர், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டி மங்கள வாத்தியங்கள் முழங்க புதிய வளைவை நோக்கி புறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தெய்வேந்திர முகூர்த்த நேரமான நண்பகல் 12.00 மணிக்கு, நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வந்த காளை மாட்டு வண்டி முதன்முறையாக புதிய “நல்லூரான் வடக்கு வாசல் வளைவு” ஊடாகச் சென்றது. 

இந்த நிகழ்வு பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அங்கு திரண்டிருந்த மக்கள் பக்தி பரவசத்துடன் நிகழ்வைக் கண்டு களித்தனர்.

இந்நிகழ்வில் பெருமளவான பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் சமயப் பிரமுகர்கள் கலந்து கொண்டு புதிய வளைவின் திறப்பு நிகழ்வை சிறப்பித்தனர்.

யாழ்ப்பாணத்தின் கந்தபுராண மரபு, சைவ சமய பாரம்பரியம் மற்றும் தமிழர் கலாசார அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த “நல்லூரான் வடக்கு வாசல் வளைவு” வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நல்லூர் ஆலயத்தை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இது புதிய அடையாளச் சின்னமாகவும், நகரின் பாரம்பரிய அழகை மேலும் உயர்த்தும் கட்டிடக் கலையின் ஓர் அடையாளமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://samugammedia.com/opening-of-the-nallooran-north-gate-curve-that-enhances-the-pride-of-nalloor-1786010112

NO COMMENTS

Exit mobile version