Home இலங்கை நல்லூர் திலீபன் நினைவுத்தூபி தூய்மைப்படுத்தல் ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்ட முதல்வர் மதிவதனி

நல்லூர் திலீபன் நினைவுத்தூபி தூய்மைப்படுத்தல் ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்ட முதல்வர் மதிவதனி

0
image

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுதினத்தை முன்னிட்டு, நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதியை ஒழுங்குபடுத்தும் பணிகளை பார்வையிடும் வகையில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி. மதிவதனி இன்று (14) நேரடி கள விஜயத்தை மேற்கொண்டார்.

நினைவுதின ஏற்பாட்டுக் குழுவினரின் கோரிக்கைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தின் போது, நினைவுத்தூபியைச் சுற்றியுள்ள பகுதியில் நல்லூர் திருவிழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வர்த்தக நிலையங்கள் இதுவரை அகற்றப்படாமல் இருப்பதை முதல்வர் அவதானித்தார்.

குறித்த கடைகளுக்கான வர்த்தக காலப்பகுதி நிறைவடைந்துள்ள போதிலும் அவை அகற்றப்படாததால், நினைவுதின நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தற்காலிக கடைகளை இன்று இரவுக்குள் உடனடியாக அகற்றுமாறு கடை நடத்துனர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார். 

அத்துடன், கடைகள் அகற்றப்படுவதை நேரடியாக கண்காணித்து உறுதி செய்யுமாறு மாநகர சபையின் பிரதம கணக்காளர் மற்றும் வருமானவரி பரிசோதகர்களுக்கும் அறிவுறுத்தினார்.

மேலும், தற்காலிக கடைகளை நடத்தி வந்தவர்கள் தங்களது கழிவுகளை நினைவுத்தூபிக்கு அருகாமையில் கொட்டியுள்ளமையும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

கழிவுகளை அப்பகுதியில் கொட்ட வேண்டாம் என கடை நடத்துனர்களை எச்சரித்த முதல்வர், கடைகள் அகற்றப்பட்ட உடனடியாக தூய்மைப்படுத்தல் பணிகளை முன்னெடுக்குமாறு மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பொறியியல் பிரிவுக்கும் பணிப்புரை விடுத்தார்.

இந்த கள விஜயத்தில் மாநகர சபையின் பிரதம கணக்காளர், வருமானவரி பரிசோதகர், மாநகர சபை உறுப்பினர்களான எஸ். மதுசிகான், என்.எம். அப்துல்லாஹ், யோகராசா மற்றும் நினைவுதின ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Source: https://samugammedia.com/chief-minister-mathivathani-personally-inspected-the-arrangements-for-cleaning-the-nallur-thileepan-memorial-1789392965

NO COMMENTS

Exit mobile version