இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் தவறுகள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ‘இம்பேக்ட் ஸ்டோரிஸ்’ (Impact Stories) ஊடகத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக முன்வைக்கப்படும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கத் தான் தயாராக இருப்பதாக சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச ரீதியில் தமக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளின் அடிப்படை மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கைப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி இராணுவ நடவடிக்கையின்போது தொழில்முறை ரீதியில் செயற்பட்டதாகவும், அந்த நடவடிக்கைகளின்போது பொதுமக்கள் உயிரிழப்புகளை குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் எனக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அண்மையில் ஐக்கிய இராச்சியமும் எனக்கு தடை விதித்துள்ளது. இந்த தடைகள் எதற்காக விதிக்கப்பட்டன? நான் என்ன தவறு செய்தேன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தான் போர்க்குற்றவாளி அல்ல எனவும், தனது நாட்டுக்காகவே போரிட்டதாகவும் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், தமக்கு எதிரான சர்வதேச தடைகள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.
Source: https://samugammedia.com/i-am-not-a-war-criminal–shavendra-silvas-dramatic-denial-1788847225
