நாட்டின் சட்டத்தையும் நீதியையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களை வலுப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே என்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நாமல் ராஜபக்ஷ இந்த நாட்டின் ஒரு சாதாரண பிரஜையே தவிர, அவர் எந்தவிதத்திலும் விசேடமான நபர் அல்லர் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், முன்பிருந்த ஊழல் மற்றும் மோசடிகளுடன் அவருக்குத் தொடர்பு இருக்குமாயின், அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் இடம்பெறும் தருணத்தில் இக்கைது இடம்பெற்றதால், இது அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை பிரதி அமைச்சர் முற்றாக நிராகரித்தார்.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சுயாதீன நிறுவனங்கள் தமது விசாரணைகளின் முடிவுகளுக்கு அமைவாகவே நபர்களை அழைப்பதும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் வழக்கம் என்றும், இத்தகைய அரசியல் நடவடிக்கைகளுக்கும் குறித்த சட்டப்பூர்வ கைதுக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
