Home இலங்கை நீதிபதிகள் ஓய்வு வயது: இன்னும் முடிவு இல்லை! – அமைச்சர் நளிந்த விளக்கம்

நீதிபதிகள் ஓய்வு வயது: இன்னும் முடிவு இல்லை! – அமைச்சர் நளிந்த விளக்கம்

0
image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவில் அரசு இதுவரை எவ்வித இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பெருமளவிலான வழக்குகள், நீதி நிர்வாகத்தில் ஏற்படும் தாமதங்கள், நீதித்துறை அதிகாரிகளின் பற்றாக்குறை, தொழில் வல்லுநர்களின் இடப்பெயர்வு மற்றும் அதிகரித்து வரும் சராசரி ஆயுள் காலம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த விடயத்தில் இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னதாக, மேலதிக அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

அரசு தனது இறுதி நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை என்றும், இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பல்வேறு தரப்பினரிடமிருந்து இந்த முன்மொழிவு குறித்து முரண்பாடான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும்,  இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னதாக அவை அனைத்தும் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நீதித்துறை அதிகாரிகளை ஆள்சேர்ப்பு செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், தகுதியான விண்ணப்பதாரர்கள் இன்மையால் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்று குறிப்பிட்டார். உதாரணமாக, திட்டமிடப்பட்ட 50 நீதிவான் பதவிகளுக்கு 33 பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Source: https://samugammedia.com/judges-retirement-age-no-decision-yet—minister-nalinth-explains-1784036574

NO COMMENTS

Exit mobile version