Home இலங்கை நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு? விமல் வீரவங்ச உரை குறித்து விசாரணை

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு? விமல் வீரவங்ச உரை குறித்து விசாரணை

0
image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 12ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பொன்றின்போது விமல் வீரவங்ச வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையே, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, விமல் வீரவங்ச வெளியிட்டதாகக் கூறப்படும் குறித்த உரை அடங்கிய இறுவெட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

குறித்த இறுவெட்டை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம, விமல் வீரவங்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார்.

Source: https://samugammedia.com/contempt-of-court-charge-investigation-regarding-vimal-weerawansas-speech-1789725040

NO COMMENTS

Exit mobile version