நுவரேலியா – நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ – எல்பட மேல் பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மீது பாரிய மரக்கிளை முறிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (23) மாலை சுமார் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் எல்பட மேல் பிரிவு தோட்டப் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் மரம் வெட்டும் பணியில் குறித்த நபர் ஈடுபட்டிருந்தபோது, பாரிய மரக்கிளையொன்று முறிந்து அவரது தலைப்பகுதியில் விழுந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த அவரை பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், உயிரிழந்தவர் கண்டி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஆர்.பி.பி. சரத்வீரசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேதப் பரிசோதனைக்காக பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையிலிருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Source: https://samugammedia.com/sadness-in-nuwara-eliya-worker-dies-after-a-tree-branch-falls-1787553308
