பண மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுவரி அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி, வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 27,500,000 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, அதன் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் நேற்றைய தினம் (14) காலை ஹங்குரன்கெத்த பகுதியில் வைத்து ஜெயலத் பண்டார திசாநாயக்கவை கைது செய்துள்ளனர்.
58 வயதுடைய சந்தேகநபரான அவரை இன்றைய தினம் (15) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://samugammedia.com/jayalath-bandara-dissanayake-arrested-in-money-laundering-case-1784094244
