திருகோணமலை – தம்பலகாமம் பிரதேசத்திற்குட்பட்ட பத்தினிபுரம் பகுதியில், கழிவுகளை அகற்றுவதற்காக தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், சில பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் வீதியோரங்களில் வீட்டுக் கழிவுகள் மற்றும் வணிகக் கழிவுகளை முறையற்ற விதத்தில் கொட்டி வருவதால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வீதியோரங்களில் கழிவுகளைக் கொட்ட வேண்டாம் என அதிகாரிகளால் எச்சரிக்கைப் பெயர்ப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றைப் பொருட்படுத்தாமல் சிலர் தொடர்ந்தும் கழிவுகளை வீசிச் செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, வீதியோரங்களில் கொட்டப்படும் பொலித்தீன் பைகள் உள்ளிட்ட கழிவுகள் பலத்த காற்றினால் அருகிலுள்ள வீடுகள் மற்றும் குடிநீர் கிணறுகளுக்குள் அடித்துச் செல்லப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன், குடிநீரும் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை, இறைச்சி மற்றும் கோழிக் கழிவுகள் வீதியோரங்களில் கொட்டப்படுவதால், உணவைத் தேடி அதிகளவிலான தெருநாய்கள் மற்றும் காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வீதிகளில் யானைகள் மற்றும் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்து, அந்த வழியாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் விபத்து அபாயத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்த போதிலும், இதுவரை உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
