Home இலங்கை பயணிகளை ஏற்றாமல் புறப்படும் படகுகள்; பெரும் வருமான இழப்பு! நெடுந்தீவில் போராட்டம்

பயணிகளை ஏற்றாமல் புறப்படும் படகுகள்; பெரும் வருமான இழப்பு! நெடுந்தீவில் போராட்டம்

0
image

நெடுந்தீவுக்கான படகு சேவையில் காணப்படும் குறைபாடுகளை உடனடியாக சீரமைக்கக் கோரி, உள்ளூர் சுற்றுலா சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இன்று (19) கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையிலான வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான படகு சேவையில், பயணிகளை முழுமையாக ஏற்றிச் செல்லாமல் படகுகள் புறப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை நெடுந்தீவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பலரை ஏற்றிச் செல்லாமல் படகுகள் புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பலர் யாழ்ப்பாணத்துக்குத் திரும்ப முடியாமல் நெடுந்தீவில் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர்.

படகு சேவையில் நிலவும் இத்தகைய குறைபாடுகளால் நெடுந்தீவின் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக, சுற்றுலாப் பயணிகள் தங்குமிடங்களை முன்பதிவு செய்து யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவான் வரை சென்ற பின்னர், அங்கிருந்து நெடுந்தீவுக்கான படகு சேவை கிடைக்காத பட்சத்தில் அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லும் நிலை ஏற்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனால் தங்குமிடங்களுக்கான முன்பதிவுகள் இரத்து செய்யப்படுவதுடன், பயணிகளிடமிருந்து பெறப்பட்ட முற்பணத்தையும் மீள வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டு, தங்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படுவதாக சுற்றுலா சேவை வழங்குநர்கள் தெரிவித்தனர்.

நெடுந்தீவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அதற்கேற்ற வகையில் நெடுந்தீவுக்கான படகு சேவையையும் உரிய முறையில் மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு சென்றுவிட்டு நெடுந்தீவு திரும்பிய நெடுந்தீவைச் சேர்ந்தவர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் படகு சேவை கிடைக்காததால் தனியாருக்குச் சொந்தமான சிறிய படகில் பயணித்துள்ளனர்.

அப்போது குறித்த படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்த 10 பேரும் கடலில் விழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிராபத்தின்றி மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

படகு சேவையில் காணப்படும் குறைபாடுகளை உடனடியாக தீர்த்து, நெடுந்தீவு மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதுகாப்பானதும் நம்பகமானதுமான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Source: https://samugammedia.com/boats-departing-without-taking-passengers-huge-loss-of-income-protest-on-the-main-road-1787132812

NO COMMENTS

Exit mobile version