Home இலங்கை பரிசோதனை என்ற போர்வையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சுகாதார பரிசோதகர் கைது!

பரிசோதனை என்ற போர்வையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சுகாதார பரிசோதகர் கைது!

0
image

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 51 வயதுடைய பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான அதிகாரி வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று (31) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபர் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

குறித்த பாடசாலையில் கடந்த 18ஆம் திகதி மாணவர்களுக்கான வழக்கமான சுகாதாரப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது பரிசோதனையில் ஈடுபட்ட அதிகாரி தங்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாலியல் தொல்லை கொடுத்ததாக சில மாணவர்கள் தமது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பெற்றோர் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட முறைப்பாட்டுக் கடிதத்தை பாடசாலை அதிபர் ஊடாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

மாணவர்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/sexual-harassment-of-female-students-under-the-guise-of-examination-health-inspector-arrested-1788242308

NO COMMENTS

Exit mobile version