Home இலங்கை பல்கலைக்கழக பணியிட வெற்றிடங்களை நிரப்ப மாதாந்தம் மீளாய்வு

பல்கலைக்கழக பணியிட வெற்றிடங்களை நிரப்ப மாதாந்தம் மீளாய்வு

0
image

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் காணப்படும் கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிட வெற்றிடங்களை நிரப்பும் வகையில், பணியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மாதாந்தம் மீளாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக உபகுழு, பணியாளர் ஆட்சேர்ப்பு தொடர்பில் மாதாந்தம் மீளாய்வு செய்ய தீர்மானித்துள்ளதாகவும், கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அனுமதி ஏற்கனவே பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் பணியிட வெற்றிடங்கள் அடையாளம் காணப்படும் சந்தர்ப்பங்களில், மேலதிக ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுவதுடன், ஒவ்வொரு பல்கலைக்கழகத்துடனும் தனித்தனியாக ஆட்சேர்ப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கணிசமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விடுதிகள், பீடக் கட்டடங்கள் மற்றும் விஞ்ஞான ஆய்வுகூடங்கள் உள்ளிட்ட வசதிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டும் மேலதிக பீடக் கட்டடங்கள் மற்றும் விடுதிகளை அமைப்பதற்கு வரவு–செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கலாநிதிப் பட்டம் பெற்ற பாடசாலை ஆசிரியர்களுக்கு எதிர்காலத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும் என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது என்றும் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/monthly-review-to-fill-university-job-vacancies-1788795303

NO COMMENTS

Exit mobile version