நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாக உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிடங்களை விரைவாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயர் கல்வி ஆலோசனைக் குழுவின் முன்னிலையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வெற்றிடமாக உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிடங்களை நிரப்புவதற்கான அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சில பல்கலைக்கழகங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள பிரதி அமைச்சர், அந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு துணைவேந்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கான சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதற்கு பணியிட வெற்றிடங்களை விரைவாக நிரப்புவது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் மொத்தம் 19 அரச பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Source: https://samugammedia.com/action-to-quickly-fill-university-job-vacancies-1789276810
