நாட்டின் பல பகுதிகளில் இன்று (4) மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மேல் சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
இப்பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் வாய்ப்பும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதேவேளை, மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக இந்த வானிலை நிலை உருவாகியுள்ளதாகவும், இந்த எச்சரிக்கை இன்று முற்பகல் 11 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Source: https://samugammedia.com/rain-strong-wind-warning-for-several-districts-1783129699
