Home இலங்கை பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது! – மானியம் கோருகிறது பேருந்து உரிமையாளர் சங்கம்!

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது! – மானியம் கோருகிறது பேருந்து உரிமையாளர் சங்கம்!

0
image

எரிபொருள் விலை உயர்ந்த போதிலும், தற்போதைக்கு பஸ் கட்டணங்களில் உயர்வு இருக்காது என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். 

தற்போது நடைமுறையில் உள்ள பஸ் கட்டண முறையின் பிரகாரம், பஸ் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். 

அதன்படி, எரிபொருள் விலை மாற்றங்கள் காரணமாக பஸ் கட்டணங்களில் திருத்தம் செய்ய வேண்டுமானால், அந்த மாற்றம் 4 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன வலியுறுத்தினார்.

இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தில் 100 ரூபா மானியம் வழங்குவதை போன்று எரிபொருள் விநியோகத்தில் ஒரு லீற்றர் டீசலுக்கு எமக்கும் 25 ரூபா மானியம் வழங்க வேண்டும். அல்லது பேருந்து கட்டணத்தை 5 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும். இல்லையேல், பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். 

கொழும்பில் இன்ற நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கமும் கடனில் ஓடுகிறது, நாங்களும் கடனில் ஓடுகிறோம். ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறது. ஆனால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுவதில்லை. நாங்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளோம். பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தனியார் பேருந்து சேவையில் ஈடுபடுபவர்கள் இந்த சேவையில் இருந்து விலகும் நிலையே தற்போது காணப்படுகிறது. இந்த மாதமும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. இதற்கமைய பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தோம். அதற்கும் ஆணைக்குழு அனுமதியளிக்கவில்லை.

இவ்வாறான நிலையில் கட்டண திருத்தம் தொடர்பில் பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இரண்டு தீர்மானங்களை எடுத்துள்ளோம். போக்குவரத்து அமைச்சுக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தில் அரசாங்கம் 100 ரூபா மானிய அடிப்படையில் வழங்குகிறது. அதேபோல் எமக்கும் மானியம் வழங்கவேண்டும்.தற்போது கோட்டா அடிப்படையில் எமக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. ஆகவே ஒரு லீற்றர் டீசலுக்கு 25 ரூபா என்ற அடிப்படையில் மானியம் வழங்கப்படவேண்டும்.

எதிர்வரும் மாதம் வருடாந்த கட்டண திருத்தம் இடம்பெறும் வரை எம்மால் காத்துக்கொண்டிருக்க முடியாது. ஒன்று, 25 ரூபா என்ற அடிப்படையில் மானியம் வழங்க வேண்டும் அல்லது 5 சதவீதத்தில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். எமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் இல்லாவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்றார்.

Source: https://samugammedia.com/bus-fares-will-not-increase—maniam-demands-says-the-bus-owners-association-1780410229

NO COMMENTS

Exit mobile version