Home இலங்கை பிலியந்தலை சம்பவம் – பொலிஸாரைத் தாக்கிய சந்தேகநபரின் மோட்டார் சைக்கிள் மீட்பு

பிலியந்தலை சம்பவம் – பொலிஸாரைத் தாக்கிய சந்தேகநபரின் மோட்டார் சைக்கிள் மீட்பு

0
image

பிலியந்தலை, பொக்குந்தர பகுதியில் இன்று (19) காலை கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்கிய சந்தேகநபரின் மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

பிலியந்தலை – மகாரகம வீதியில் உள்ள வீடொன்றுக்கு அருகிலுள்ள தோட்டப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கூரிய ஆயுதத் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் ஆகியோர் தற்போது கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பொரலஸ்கமுவ ஓ.பி.பெரேரா மாவத்தையில் உள்ள வீடொன்றுக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் கூரிய ஆயுதங்களுடன் வந்த நால்வர், வீட்டில் இருந்தவர்களைத் தாக்கியதுடன் வீட்டுக்கும் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். 

பின்னர் குறித்த சந்தேக நபர்கள் பிலியந்தலையை நோக்கி தப்பிச் செல்வதாக பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதற்கமைவாக, பிலியந்தலை போகுந்தர வீரசிங்க மாவத்தை பகுதியில் பொலிஸார் காவலில் ஈடுபட்டிருந்த போது, தப்பிச் சென்ற இரு சந்தேக நபர்களும் எதிர்பாராத விதமாக பொலிஸாரைக் கண்டதனால் உடனடியாக மோட்டார் சைக்கிளைத் திருப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். 

இதன்போது மோட்டார் சைக்கிளை நிறுத்த பொலிஸ் அதிகாரிகள் பெரும் முயற்சி செய்த நிலையில், மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தவர் தனது கையில் இருந்த கூரிய ஆயுதத்தால் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைத் தாக்கியுள்ளார். 

அப்போது கான்ஸ்டபிள் பின்னால் அமர்ந்திருந்தவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு சந்தேக நபரின் இடுப்புப் பகுதியில் பட்டதில் அவர் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்துள்ளார். 

உடனடியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பின்னால் அமர்ந்திருந்தவரை கைது செய்த போதிலும், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பண்டாரகம, வீதியகொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இச்சம்பவத்தில் காயமடைந்த சந்தேக நபர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள், அதேபோன்று குறித்த நபர்களின் தாக்குதலுக்கு உள்ளான வீட்டில் இருந்த யுவதி ஒருவரும் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இச்சம்பவம் தொடர்பில் பிலியந்தலை மற்றும் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையங்கள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Source: https://samugammedia.com/piliyandhalai-incident—suspects-motorcycle-recovered-after-attacking-the-police-1784459977

NO COMMENTS

Exit mobile version