Home இலங்கை பாடகரின் கைது எதிரொலி: கிளிநொச்சியில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

பாடகரின் கைது எதிரொலி: கிளிநொச்சியில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

0
image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளம் பாடகர் சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய கருத்துக்களைக் கொண்ட பாடலைப் பாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 24 வயதான சங்கீர்த்தனன், தற்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

இந்த கைது சம்பவம் வடக்கு மாகாணத்தில் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடமும் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் காலத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையில், அந்த வாக்குறுதி இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டி அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், “குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக நடைபெறவுள்ளது.

இந்தப் போராட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 

சங்கீர்த்தனனின் விடுதலையையும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் கைதுகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/singers-arrest-sparks-massive-protest-in-kilinochchi-today-1780711878

NO COMMENTS

Exit mobile version