பாணந்துறை கடற்கரையில் ஜெல்லிமீன்கள் தாக்கியதில் 4 சிறுவர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (26) பிற்பகல் பாணந்துறை கடற்கரையில் சிறிய அளவிலான 300க்கும் மேற்பட்ட ஜெல்லிமீன்கள் கரையொதுங்கியுள்ளன.
இதன்போது, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு கடலில் நீராடிக் கொண்டிருந்தவர்களின் உடலில் ஜெல்லிமீன்கள் பட்டதால் அவர்கள் காயமடைந்துள்ளதாக கடற்கரை உயிர்காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் சிலர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜெல்லிமீன்கள் அதிகளவில் காணப்பட்டதைத் தொடர்ந்து, கடலில் நீராடிக் கொண்டிருந்த அனைவரையும் கடற்கரைப் பகுதியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.
