Home இலங்கை பாதை இல்லாமல் தவிக்கும் வேவண்டன் தோட்ட மக்கள்; அடிப்படை வசதிகளை கோரி போராட்டம்

பாதை இல்லாமல் தவிக்கும் வேவண்டன் தோட்ட மக்கள்; அடிப்படை வசதிகளை கோரி போராட்டம்

0
image

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேவண்டன் தோட்ட மக்களால், தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாதையை அவசரமாக புனரமைத்து தருமாறு கோரி இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வேவண்டன் தோட்டத்தில் சுமார் 48 குடும்பங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த கடும் மழைக் காலத்தில் தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாதை முழுமையாக சேதமடைந்ததால், அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

பாதை சேதமடைந்ததன் காரணமாக தோட்டத்தில் இயங்கிய பாடசாலையும் தற்போது செயல்படாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மழைக் காலத்தில் மாணவர்கள் அருகிலுள்ள பாடசாலைகளில் தங்கி கல்வி கற்ற நிலையில், தற்போது மீண்டும் தங்களது சொந்த இடமான வேவண்டன் தோட்டத்திற்குத் திரும்பி வசித்து வருவதாக மக்கள் தெரிவித்தனர்.

பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைவில் ஏற்படுத்தித் தருவதாக கொத்மலை பிரதேச செயலகம் உறுதியளித்திருந்தாலும், கடந்த 9 மாதங்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால், தோட்டத்திற்குச் செல்லும் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமான பாதையை உடனடியாக புனரமைத்து தருமாறு வலியுறுத்தி, பதாகைகள் ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் வேவண்டன் தோட்டத்திலிருந்து நடைபயணமாக கண்டி–நுவரெலியா பிரதான வீதியின் கெரண்டி எல்ல பகுதியில் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதையை விரைவாக சீரமைத்து, தோட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தருமாறு அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: https://samugammedia.com/vevandan-garden-residents-struggling-without-a-road-protesting-for-basic-facilities-1784264041

NO COMMENTS

Exit mobile version