Home இலங்கை பிறரின் பொதிகளை எடுத்துச் செல்ல வேண்டாம்! விமானப் பயணிகளுக்கு எச்சரிக்கை

பிறரின் பொதிகளை எடுத்துச் செல்ல வேண்டாம்! விமானப் பயணிகளுக்கு எச்சரிக்கை

0
image

விமானப் பயணம் உள்ளிட்ட எந்தவொரு பயணத்தின்போதும், பிறருக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப் பைகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களம், விமானப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது.

பயணிகளுக்குத் தெரியாமலேயே போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோதப் பொருட்களைக் கடத்துவதற்கு சில குற்றக் குழுக்கள் அவர்களை பயன்படுத்தும் அபாயம் காணப்படுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவிக்கையில், தாம் எடுத்துச் செல்லும் பொருளின் தன்மை குறித்தே தெரியாமல் பொதுமக்கள் கடுமையான குற்றச் செயல்களில் சிக்கிக்கொள்ளும் அபாயம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்கூட அறியாமலேயே போதைப்பொருள் கடத்தல் குழுக்களால் பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி பெருந்தொகையான போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பயணப் பையை உரிமையாளர் தாமே பரிசோதித்தாலும் எளிதில் கண்டறிய முடியாத வகையில் போதைப்பொருட்களை மறைத்து வைக்கும் நுட்பங்களை கடத்தல்காரர்கள் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலவச விமானப் பயணச்சீட்டு வழங்கி வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்வதாக யாரேனும் முன்வந்தால், அதன் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் குறித்து மிகுந்த அவதானத்துடன் சிந்திக்குமாறும் சுங்கத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

உலகின் பல நாடுகளில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.

எனவே, எந்தச் சூழ்நிலையிலும் தமக்குச் சொந்தமில்லாத பொதிகள், பயணப் பைகள் அல்லது பொருட்களை எடுத்துச் செல்ல சம்மதிக்க வேண்டாம் என இலங்கை சுங்கத் திணைக்களம் பொதுமக்களை மேலும் வலியுறுத்தியுள்ளது.

Source: https://samugammedia.com/dont-take-others-luggage-a-warning-for-airline-passengers-1785481762

NO COMMENTS

Exit mobile version