Home இலங்கை பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி! தாயின் கண்முன்னே நடந்த பயங்கரம்

பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி! தாயின் கண்முன்னே நடந்த பயங்கரம்

0
image

 

மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் பாடசாலைக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி ஒருவர் பேருந்திலிருந்து கீழே விழுந்து அதன் பின்சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கொடஉட பகுதியைச் சேர்ந்த சனுதி சேனாரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் திக்வெல்ல வடக்கு மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

இன்று காலை தனது தாயார் மற்றும் இளைய சகோதரனுடன் பாடசாலைக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்துக்கு வந்திருந்த நிலையில், மாத்தறையில் இருந்து மித்தெனிய நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் ஏற முயன்றபோது இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, முதலில் தாயாரும் இளைய சகோதரனும் பேருந்தின் முன்பக்க கதவு வழியாக ஏறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமி பேருந்தில் ஏற முயன்றபோது, சாரதி பேருந்தை முன்னோக்கி இயக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுமி, பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து ஏற்பட்ட உடனேயே பேருந்தின் சாரதி வாகனத்தை கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு திக்வெல்ல திடீர் மரண விசாரணை அதிகாரி ஜயந்த சமரசிங்க வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்புமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தப்பிச் சென்ற சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளுடன் மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/girl-dies-after-getting-caught-in-bus-wheel-horrifying-incident-happened-right-in-front-of-her-mother-1784641001

NO COMMENTS

Exit mobile version