பொலன்னறுவை, பகமூண – தம்புள்ளை வீதியின் தமனயாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண்ணொருவரும் அவரது மகனும் உயிரிழந்துள்ளதுடன், ஒன்றரை வயதுடைய குழந்தையொன்று காயமடைந்துள்ளது.
இன்று (11) அதிகாலை 1.25 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பகமூண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பகமூண, தமனயாய பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரும் அவரது 43 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளனர்.
அவர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒன்றரை வயதுடைய குழந்தையே காயமடைந்துள்ளது.
காயமடைந்த குழந்தை பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த பேருந்து, பகமூண – தம்புள்ளை வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் தமனயாய பகுதிக்கு திரும்ப முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் பின்னர் பேருந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் அமைந்துள்ள வாய்க்காலின் நடுவே சிக்கிக்கொண்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதியை பகமூண பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Source: https://samugammedia.com/motorcycle-collides-with-bus-mother-and-son-killed-child-injured-1786428773