Home இலங்கை பேருந்து நிலையங்களைச் சூழ்ந்த கடைகளில் திடீர் சோதனை: 112 வர்த்தக நிலையங்களில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிப்பு

பேருந்து நிலையங்களைச் சூழ்ந்த கடைகளில் திடீர் சோதனை: 112 வர்த்தக நிலையங்களில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிப்பு

0
image

நாடு முழுவதும் உள்ள முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் தூரசேவை பேருந்து முனையங்களைச் சூழ்ந்துள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (20) திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த விசேட நடவடிக்கையின் போது மொத்தம் 112 கடைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சோதனைகளின் போது, உற்பத்தியாளர் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு பானங்கள், சிற்றுண்டிகள் மற்றும் பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தல், பொருட்களின் விலைகளை தெளிவாக காட்சிப்படுத்தாதமை, உற்பத்தித் திகதி, காலாவதியாகும் திகதி, தொகுதி எண், உற்பத்தியாளர் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட கட்டாய தகவல்களை குறிப்பிடாதமை, மேலும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்தமை உள்ளிட்ட பல்வேறு சட்ட மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட கடைகள் மற்றும் உணவகங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் உரிய நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் தரமற்ற உணவுகளை வழங்கும் வர்த்தகர்களுக்கு எதிராக எந்தவித பாரபட்சமும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரசபை எச்சரித்துள்ளது.

இதேபோன்ற திடீர் சோதனைகள் எதிர்காலத்திலும் நாடு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் அறிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/sudden-inspection-at-shops-around-bus-stations-various-irregularities-found-in-112-commercial-establishments-1784698675

NO COMMENTS

Exit mobile version