அம்பாறை மாவட்டம், பொத்துவில் பசறிச்சேனை கிராமத்திற்குள் நேற்றிரவு (01) புகுந்த காட்டு யானையொன்று, அதனை விரட்ட முயன்ற கிராம மக்களை நோக்கி துரத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கிராமத்திற்குள் நுழைந்து சுற்றித்திரிந்த காட்டு யானையை, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து காட்டுப் பகுதிக்குள் விரட்ட முயன்றுள்ளனர். இதன்போது யானை ஆவேசமடைந்து பொதுமக்களை நோக்கி முன்னேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த மக்கள் பாதுகாப்பு கருதி நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். எனினும், குறித்த சம்பவத்தில் எவ்வித உயிர்ச் சேதமோ அல்லது உடைமைச் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், கிராம இளைஞர்கள் மிகுந்த துணிச்சலுடனும் பொறுப்புடனும் செயற்பட்டு, யானைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதனை பாதுகாப்பாக மீண்டும் காட்டுப் பகுதிக்குள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், பசறிச்சேனை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அண்மைக் காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இரவு நேரங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், தேவையற்ற விதத்தில் வீடுகளை விட்டு வெளியே செல்வதைத் தவிர்த்து, உயிர் மற்றும் உடைமைப் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
