Home இலங்கை பொலிஸாரை மோதி தப்ப முயன்ற வேன் சாரதி மீது துப்பாக்கிச்சூடு: அம்பலமான போதைப்பொருள் கடத்தல்

பொலிஸாரை மோதி தப்ப முயன்ற வேன் சாரதி மீது துப்பாக்கிச்சூடு: அம்பலமான போதைப்பொருள் கடத்தல்

0
image

கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச் செல்ல முயன்ற வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ளது.

மேல் மாகாணப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த வேன் மூலம் கம்பஹா பகுதியில் போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து வெலிவேரிய பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, வேன் கம்பஹா – உடுகம்பொல நோக்கிப் பயணிப்பதை உறுதிப்படுத்திய பொலிஸார், ஜீப் வண்டி மூலம் அதனை பின்தொடர்ந்துள்ளனர்.

உடுகம்பொல வீதியின் மல்வத்த சந்தைப் பகுதியில் வேன் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் அதனைச் சோதனையிட முற்பட்டுள்ளனர்.

இதன்போது, வேனின் சாரதி திடீரென வாகனத்தை முன்னும் பின்னுமாக பல தடவைகள் செலுத்தியதுடன், வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி விபத்துகளை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், பொலிஸாரின் ஜீப் வண்டியிலும் வேன் மோதியதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் செல்ல சாரதி முயன்றுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் வேனை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் வேனின் சாரதி காயமடைந்த நிலையில், பொலிஸ் பாதுகாப்புடன் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் வேனில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 15 கிராம் ஹெரோயின் மற்றும் 9 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/gunfire-at-a-van-driver-who-tried-to-escape-after-hitting-the-police-massive-drug-smuggling-1789277321

NO COMMENTS

Exit mobile version