Home இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்; சமிந்த விஜேசிறி எம்.பிக்கு சிறைத்தண்டனை

பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்; சமிந்த விஜேசிறி எம்.பிக்கு சிறைத்தண்டனை

0
image

இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் அவர்களுக்கு காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி இந்தத் தீர்ப்பை இன்று வழங்கியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றில், பண்டாரவளை நகர சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி உள்ளிட்டோர் ஜீப் ரக வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் வாகனத்தை பொலிஸ் ஜீப் ஒன்று முந்திச் சென்றதாகவும், இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, அவர்களைத் தடுத்து வைத்தமை மற்றும் உடல்ரீதியான தீங்கு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

குற்றம் சாட்டப்பட்டவர்களான சமிந்த விஜேசிறி மற்றும் அவரது சாரதி பந்துல ரத்நாயக்க ஆகியோர் 4 குற்றச்சாட்டுகளிலும், அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரியான ரசிக கருணாதிலக்க 3 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டனர். இருப்பினும், ஓட்டுநர் பந்துல ரத்நாயக்க உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டுகளில் சமிந்த விஜேசிறி குற்றவாளியாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து, பதுளை மேல் நீதிமன்றம் அவருக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

Source: https://samugammedia.com/threat-to-police-officers-samindh-vijechiri-mp-sentenced-to-prison-1785220105

NO COMMENTS

Exit mobile version