Home இலங்கை போதைப்பொருள் கடத்தல் பணத்தில் சொத்துக்கள் கொள்வனவு – கொழும்பில் பெண் கைது

போதைப்பொருள் கடத்தல் பணத்தில் சொத்துக்கள் கொள்வனவு – கொழும்பில் பெண் கைது

0
image

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைக் கொள்வனவு செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 53 வயதுடைய பெண் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 14, ஃபெர்குசன் வீதிப் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி பொலிஸ் மா அதிபரால் முறைப்பாடு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பல்வேறு சொத்துக்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவற்றை முடக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் முடக்கப்பட்ட சொத்துக்களில், ஜா-எல பகுதியில் 8.66 பேர்ச்சஸ் காணி ஒன்றும், ஆறு வங்கிக் கணக்குகளில் காணப்பட்ட 59 இலட்சம் ரூபாய் பணமும் அடங்குகின்றன.

மேலும், கொழும்பு 14 பகுதியில் தலா 225 இலட்சம் ரூபாய் மற்றும் 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு கடைகளும், 200 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று மாடி வீடொன்றுடன் கூடிய காணியும் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைப் பயன்படுத்திப் பெறப்பட்டவை என விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து, சந்தேகநபர் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். 

Source: https://samugammedia.com/property-purchases-in-drug-trafficking-work–woman-arrested-in-colombo-1786687767

NO COMMENTS

Exit mobile version