மன்னார், மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடு திருத்தலப் பகுதியில் இடம்பெற்ற கோர மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (01) சனிக்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த 18 வயதுடைய அந்தோனி ஜெரோம் என்பவரே விபத்தில் உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 06 ஆம் திகதி மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தற்போது மடு திருத்தலத்திற்கு வருகை தந்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில், அவர் யாத்திரைக்காக மடு திருத்தலத்திற்கு வந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மடு ரோடு சந்தி – பள்ளமடு சந்தி வீதியில் மடு திருத்தலப் பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, தலைக்கவசம் அணியாத நிலையில் வீதி தடையை கடக்க முயன்றதாகவும், இதன்போது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து தூக்கி எறியப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
