மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சிறைக்கூட்டினுள் வைத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி
ஒருவர் சவரப் பிளேடால் தனது கழுத்து மற்றும் கையை அறுத்து உயிர்மாய்க்க முயன்ற சம்பவம்
நேற்று பிற்பகல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, தையிட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய குறித்த நபர், மட்டக்களப்பில் மூன்று திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்திருந்தார்.
பின்னர் வழக்கு விசாரணைக்குச் செல்லாமல் தலைமறைவாக இருந்ததால், அவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கடந்த 13-ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் ஆகஸ்ட் 3-ஆம் திகதி வரை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்ட அவர், பிற்பகல் 3.00 மணியளவில் அங்கிருந்த மலசல கூடத்திற்குள் சென்று சவரப் பிளேடால் தனது கழுத்தையும் கையையும் அறுத்துக் கொண்டுள்ளார்.
படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரும் தடயவியல் பிரிவினரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
