மட்டக்களப்பு நகரில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைபட்டு, டெங்கு நுளம்புப் பெருக்கம் அதிகமாகக் காணப்பட்ட வடிகான்களைச் சுத்தப்படுத்தும் விசேட சிரமதானப் பணி இன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து இப்பணியை மேற்கொண்டன.
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் இருந்து ஆரம்பமான இச்சிரமதானப் பணியில், பிரதான வீதியை ஒட்டியுள்ள கழிவுநீர் வடிகான்களில் தேங்கியிருந்த பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகள் அகற்றப்பட்டுச் சுத்தப்படுத்தப்பட்டன.
கடந்த காலங்களில் வீதி அபிவிருத்திக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், வடிகான்கள் சரியாகச் சீரமைக்கப்படாததால் வெள்ளப் பெருக்குக் காலங்களில் மக்கள் சிரமப்பட்டதுடன் டெங்கு பரவும் அபாயமும் நிலவியது. இதனையடுத்து, பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, பிரஜா சக்தி உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினருமான ரு.உதயராஜ் தலைமையில் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் கழிவுகளை அகற்றியதுடன், மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
இந்தத் துப்புரவுப் பணி மூலம் எதிர்வரும் நாட்களில் அப்பகுதியில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் பெருகுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
