போதைப்பொருள் அல்லது மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டறிவதற்கான சோதனைகளை நாடு முழுவதும் தீவிரப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதனைத் தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துகளுக்கு போதைப்பொருள் பயன்பாடு, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், கவனயீனமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் செலுத்துதல் மற்றும் அதிக சோர்வு ஆகியவை முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குறிப்பாக டிப்பர் மற்றும் லொறி சாரதிகள், முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பயணிகள் பேருந்து சாரதிகளை இலக்காகக் கொண்டு கூடுதல் சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், அதிக வேகத்தில் வாகனம் செலுத்துதல், போட்டியிட்டு வாகனம் செலுத்துதல், ஒழுக்கமற்ற முறையில் வாகனம் செலுத்துதல் அல்லது போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் பேருந்துகளை செலுத்துதல் போன்ற சம்பவங்கள் தொடர்பான காணொளிகளை பொலிஸாருக்கு அனுப்புமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான காணொளிகளை வாகனத்தின் இலக்கத்தகடு தெளிவாகத் தெரியுமாறு 070 47 55 600 என்ற வாட்ஸ் அப் இலக்கத்திற்கு அனுப்புமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலும் சட்டவிரோதமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
