புத்தாண்டு அழகி போட்டி நிகழ்வொன்றின் போது மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண்ணுக்கும், குறித்த பாம்பை அவருக்கு விற்பனை செய்த நபருக்கும் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்ட இந்த சம்பவம் தொடர்பில், வனஜீவிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பெல்லன்வில கொழும்பு மாவட்ட வனஜீவிகள் வலய அலுவலக அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் கீழ் குறித்த இளம் பெண்ணும், பணம் பெற்றுக்கொண்டு மலைப்பாம்பை வழங்கிய நபரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கடந்த ஜூலை 22ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இருவரும் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து, பாதுகாக்கப்பட்ட விலங்கொன்றை வைத்துக்கொண்டு நடனமாடிய குற்றத்திற்காக இளம் பெண்ணுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அதேவேளை, பாதுகாக்கப்பட வேண்டிய விலங்கொன்றை வைத்திருந்து விற்பனை செய்த குற்றத்திற்காக மற்றைய சந்தேகநபருக்கு 100,000 ரூபாய் அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.
பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை வைத்திருத்தல், கொண்டு செல்லுதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் சட்டவிரோதமானது எனவும், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனஜீவிகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Source: https://samugammedia.com/young-woman-who-danced-with-a-snake-fined-rs-50000-1785991520
