2026ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, மஸ்கெலியா பிரதேச சபையினால் இலவச மருத்துவ முகாம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், உள்ளூராட்சி வாரத்தின் நான்காம் நாளான செப்டம்பர் 17ஆம் திகதி இந்த மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
“மக்களை பாதுகாப்போம்” என்ற கருப்பொருளில், மஸ்கெலியா பிரதேச சபை, மஸ்கெலியா சுகாதார பிரிவு மற்றும் பொது வைத்தியசாலை ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
பிரதேச சபை தலைவர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில், மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி எச்.எம். ஈர்சாட் தலைமையிலான வைத்திய குழுவினரும்,
மாவட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்ட வைத்திய அதிகாரிகளும், சுகாதார பணிமனையில் பணியாற்றும் தாதியர்களும் கலந்துகொண்டு மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கினர்.
இதன்போது மக்களுக்கு தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டதுடன், இந்த மருந்துகளை “NIL CARBON” அமைப்பு வழங்கியிருந்தது.
மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில், பிரதேச சபைக்கு உட்பட்ட பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக்கொண்டனர்.
Source: https://samugammedia.com/free-medical-camp-for-the-public-in-maskeliya-1789800144
