Home இலங்கை மஹர ஊரடங்கு தொடர்ந்து அமுலில்! துரித விசாரணை ஆரம்பம்; சேத விபரங்கள் வெளியானது

மஹர ஊரடங்கு தொடர்ந்து அமுலில்! துரித விசாரணை ஆரம்பம்; சேத விபரங்கள் வெளியானது

0
image

மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள 246 கெண்டலியத்த வீதி – மேற்கு, 246 சி கெண்டலியத்த வீதி – வடக்கு மற்றும் 181 ஜி – தம்புவ ஆகிய கிராம சேவைப் பிரிவுகளுக்குள் மட்டும், நேற்று இரவு முதல் அமுலான பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது என்றும் அவசர தேவைகள் இருப்பின் அண்மையில் இருக்கும் பாதுகாப்புத் துறையை தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸ் திணைக்களம் கேட்டுள்ளது.

இந்நிலையில் மஹர சிறைச்சாலையில் நேற்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் உருவான பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 7 கைதிகள் காயமடைந்த நிலையில், அவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் அவசரமாக களமிறக்கப்பட்டதுடன், விமானப்படைக்குச் சொந்தமான Bell 412 ரக ஹெலிகொப்டரும் ட்ரோனும் சிறைச்சாலை வளாகத்தின் நிலைமையை வான்வழியாக கண்காணிக்க பயன்படுத்தப்பட்டன.

இதற்கிடையில், கைதிகள் சிறைச்சாலையின் தலைமை சிறைக் கட்டுப்பாட்டாளரின் அலுவலகம் மற்றும் ஒழுக்கவியல் பிரிவுக்கு தீ வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் இடம்பெற்ற வேளையில் கைதிகளைப் பார்வையிட வந்திருந்த உறவினர்கள் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்படாததால், அவர்கள் சிறைச்சாலை முன்பாக ஒன்று கூடியனர். 

இதன்போது பாதுகாப்பு தரப்பினருக்கும் உறவினர்களுக்கும் இடையில் பதற்றமான சூழல் உருவானது.

சிறைச்சாலைக்குள் இருந்து துப்பாக்கிச் சூட்டை ஒத்த சத்தங்கள் கேட்டதாகக் கூறப்படுவதையடுத்து, அங்கு திரண்டிருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பொலிஸ் தடைகளை உடைத்து உள்ளே செல்ல முயன்றதாகவும், பின்னர் பாதுகாப்புப் படையினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சிலர் பாதுகாப்பு தரப்பினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா மற்றும் புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன ஆகியோர் நேற்று இரவு மஹர சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டனர்.

சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபருடன் இணைந்து சிறைச்சாலைக்கு தேவையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க தெரிவித்துள்ளார். 

இன்று (02) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

சிறைச்சாலையின் சமையலறை, புனர்வாழ்வுக் கட்டிடம் மற்றும் அலுவலகம், தலைமை சிறைக்கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை என்பன சேதமாகியுள்ளதாக தெரிவித்தார். 

இதனிடையே, குறித்த பதற்றமான சூழ்நிலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

Source: https://samugammedia.com/mahar-lockdown-continues-in-effect-rapid-investigation-begins-damage-details-released-1785646088

NO COMMENTS

Exit mobile version