Home இலங்கை மஹர சிறை கலவரம் திட்டமிட்ட நாசவேலை! வெளிப்புற தொடர்பு இருந்ததா? – நீதியமைச்சர் அதிர்ச்சி தகவல்

மஹர சிறை கலவரம் திட்டமிட்ட நாசவேலை! வெளிப்புற தொடர்பு இருந்ததா? – நீதியமைச்சர் அதிர்ச்சி தகவல்

0
image

மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவம், திட்டமிட்ட நாசவேலை மற்றும் தீவைப்பு நடவடிக்கைகளின் அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று (04) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், இது சாதாரண கைதிகளுக்கிடையிலான மோதல் அல்ல என்றும், சிறை நிர்வாகத்தை செயலிழக்கச் செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சியாக இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிட்டார்.

சம்பவத்தின் போது கைதிகள் சிறைச்சாலையின் சமையலறை, உணவகம், மருத்துவப் பிரிவு மற்றும் பிரதான சிறை அதிகாரியின் அலுவலகம் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளுக்கு திட்டமிட்டு தீ வைத்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரின் விளக்கத்தின்படி, ஆகஸ்ட் 1 ஆம் திகதி மூன்று கைதிகள் சிறைச்சாலையின் கூரையில் ஏறி எதிர்ப்பில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மேலும் சுமார் 1,000 கைதிகள் போராட்டத்தில் இணைந்ததால் நிலைமை தீவிரமடைந்தது.

இதையடுத்து கைதிகள் பிரதான நுழைவாயிலை நோக்கி கற்களை வீசியதாகவும், நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகள் கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் இறப்பர் குண்டுகளை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதற்குள் சிறைச்சாலையின் பல பகுதிகள் சேதமடைந்திருந்ததாகவும் கூறினார்.

ஆகஸ்ட் 2 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) மற்றும் சிறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு, நிலைமையை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கைதிகளை மீண்டும் அவர்களது அறைகளுக்கு அனுப்பியதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்தக் கலவரத்தில் ஒரு கைதி உயிரிழந்ததுடன், மேலும் எட்டு கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறை அதிகாரிகள் எவரும் உயிரிழக்கவோ காயமடையவோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மஹர சம்பவத்தை அண்மையில் இடம்பெற்ற நீர்கொழும்பு சிறை கலவரத்துடன் ஒப்பிட்ட அமைச்சர், நீர்கொழும்பில் கைதிகளுக்கிடையிலான மோதல் இடம்பெற்ற நிலையில், மஹரவில் சிறை நிர்வாகத்துக்கு எதிராக நேரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இவ்வளவு அதிகமான கைதிகள் ஒரே நேரத்தில் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டனர் என்பது குறித்து சந்தேகம் நிலவுவதாகவும், வெளிப்புற தாக்கம் இருந்ததா என்பதையும் விசாரணைகள் மூலம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மஹர சிறையை செயலிழக்கச் செய்வதே இந்தச் சம்பவத்தின் நோக்கமாக இருந்திருக்கலாம் எனக் கூறிய அமைச்சர், சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தற்போது மஹர சிறைச்சாலையின் நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/mahar-prison-riot-was-a-planned-mischief-was-there-any-outside-connection–law-ministers-shocking-statement-1785827354

NO COMMENTS

Exit mobile version