ஹட்டனில் இருந்து பொகவந்தலாவ நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்றில் அளவுக்கு அதிகமாக பாடசாலை மாணவர்கள் ஏற்றிச் செல்லப்பட்ட சம்பவம் இன்று காலை ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் பதிவாகியுள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் குறித்த தனியார் பேருந்தில், அதிகளவான மாணவர்கள் பயணித்ததுடன், சில மாணவர்கள் பேருந்தின் இருபுற மிதிப்பலகைகளிலும் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஹட்டனில் இருந்து தினமும் காலை வேளையில் புறப்படும் இந்த பேருந்தில் அதிகளவான மாணவர்கள் பயணிப்பதாகவும், போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் மாணவர்கள் இவ்வாறான ஆபத்தான சூழ்நிலையில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர்.
எனவே, பாடசாலை நாட்களில் மாணவர்களின் போக்குவரத்து தேவையை கருத்திற்கொண்டு, காலை நேரங்களில் மேலதிக அரச பேருந்து சேவைகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்கள் உயிரைப் பணயம் வைத்து பேருந்தின் மிதிப்பலகைகளில் தொங்கியபடி பயணிக்கும் நிலை தொடர்வது கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
Source: https://samugammedia.com/students-hanging-on-the-footboards—dangerous-bus-ride-in-hatton-1785389788
