Home இலங்கை மீனவர் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள்: திருகோணமலையில் அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு!

மீனவர் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள்: திருகோணமலையில் அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு!

0
image

திருகோணமலை மாவட்டக் கடற்றொழிலாளர்கள் நாள்தோறும் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களுக்கு விரைவான மற்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்கும் நோக்கில், சிறப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (13) மாலை திருகோணமலை மாவட்டச் செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் W. G. H. ஹேமந்தகுமாரவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

நிகழ்வின் தொடக்கத்தில் உரையாற்றிய அமைச்சர், இக்கலந்தாய்வின் முதன்மை நோக்கம் மற்றும் இதன் மூலம் எட்டப்பட வேண்டிய இலக்குகள் குறித்து விரிவாகக் சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து, கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து ஆழமாக ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர், மீனவ சமூகம் சந்திக்கும் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் சவால்கள் குறித்துத் தமது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

மேலும், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், மாவட்ட மீன்பிடி கூட்டுத்தாபன அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் இதில் பங்கேற்று, மீனவர்களின் நலன் சார்ந்த பல முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடினர்.

Source: https://samugammedia.com/daily-challenges-faced-by-fishermen-minister-takes-a-bold-decision-in-trincomalee-1786629289

NO COMMENTS

Exit mobile version