போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன இன்றைய தினம்(30) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்ததுடன் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டார்.
இதன் ஓர் அங்கமாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரனின் ஒழுங்கமைப்பிலும் பிரதி அமைச்சரின் தலைமையிலும் விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலக அரியாத்தை மண்டபத்தில் மு.ப 11.30 மணிக்கு நடைபெற்றது.
மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த பிரதி அமைச்சர் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
குறித்த கலந்துரையாடலானது முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வீதி அபிவிருத்திகள் தொடர்பிலும் பொதுப் போக்குவரத்து மற்றும் நகரமயமாக்கல் தொடர்பிலும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
தொடர்ந்து எதிர்காலத்தில் மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி தேவைகள்,போக்குவரத்து தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெயக்காந்(காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியியலாளர்கள், கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர், போக்குவரத்து அதிகார சபையின் உத்தியோகத்தர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், அரச பேருந்து மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
