மலையகத்தின் கலை, இலக்கியம், சிற்கதை, நாவல், நாடகம், திரைப்படம், தொழிற்சங்கம், அரசியல், மொழி பெயர்ப்பு என பன்முக ஆளுமை கொண்ட மூத்த எழுத்தாளரும், கலாபூஷணம் மற்றும் சாகித்ய ரத்னா விருதுகள் பெற்றவருமான மு.சி. என்று சிறப்பிக்கப்படும் மு.சிவலிங்கத்தின் அமுதவிழா நிகழ்வுகள் இம்மாதம் 27 ஆந் திகதி வியாழக்கிழமை பூரணை தினத்தன்று அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய கலையரங்கத்தில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இடம்பெறவுள்ளது.
மங்கல விளக்கேற்றல் மற்றும் அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி மாணவர்களின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகும் அமுதவிழா நிகழ்வில் மல்லியப்பூசந்தி திலகரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, கவிஞர் சு. முரளிதரன் தலைமையுரை நிகழ்த்துவார்.
நிகழ்வில் “சிவாமுதம்” சிறப்பிதழ் வெளியீட்டில் கலாநிதி பெ. சரவணகுமார் சிவாமுதம் இதழின் கலை, இலக்கியப் பார்வை என்ற தலைப்பிலும், கலாநிதி எம்.எம். ஜெயசீலன் அரசியல், சமூகப் பார்வை என்ற தலைப்பிலும், துரை. மதியுகராஜா மாகாண சபை உப தலைவராக மு.சி. என்ற தலைப்பிலும், பேராசிரியர் ஸ்ரீபிரசாந்தன் ஈழத்து தமிழ் இலக்கிய பரப்பில் மு.சி. என்ற தலைப்பிலும், சந்திரலேகா கிங்ஸ்லி மு.சி. யின் சமுக, அரசியல் தடம் என்ற தலைப்பிலும், சிராஜ் மஹூர் சக சமூகப் பார்வையில் மு.சி.யின் சமூகப் பணி என்ற தலைப்பிலும், சிவா பரமேஸ்வரன் சர்வதேச தமிழர் தளத்தில் மு.சி. என்ற தலைப்பிலும், ஹேமச்சந்திர பத்திரன சக சமூகப் பார்வையில் மு.சி.யின் இலக்கியப் பணி என்ற தலைப்பிலும், சு. தவச்செல்வன் மு.சி.யின் கலை இலக்கியத் தடம் என்ற தலைப்பிலும் கருத்துரை நிகழ்த்துவார்கள்..
தொடர்ந்து பொன். பிரபாகரன் நெறியாள்கையில், மு.சி,யின் “ஒப்பாரிக் கோச்சி” சிறுகதை நாடகமும், மு.சி.யின் வாழ்க்கைச் சுவடு திரைக்காட்சியும், மலையகத் தமிழ்ச்சங்கம் மு.சி.க்கு வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் கௌரவமும் இடம்பெற்று மு. சிவானந்தனின் நன்றியுரையுடன் நிறைவு பெறும்.
