Home இலங்கை மூவரின் உயிரைப் பறித்த கோரம் – சாரதியின் மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி

மூவரின் உயிரைப் பறித்த கோரம் – சாரதியின் மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி

0
image

கொழும்பு, மட்டக்குளி பகுதியில் மூவரின் உயிரைப் பறித்த கோர வீதி விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி, விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கஞ்சா போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ சட்டப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மட்டக்குளி பகுதியில் நேற்று (16) இரவு இடம்பெற்ற இந்த பயங்கர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், மேலும் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அதிவேகமாகச் சென்று வீதியில் பயணித்த மூன்று முச்சக்கரவண்டிகள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த எட்டு பேர், பிரதேசவாசிகளின் உதவியுடன் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சட்டப் பரிசோதனையிலேயே விபத்து இடம்பெற்றபோது அவர் கஞ்சா போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/shocking-shock-revealed-in-drivers-medical-examination-1789626933

NO COMMENTS

Exit mobile version