நாட்டில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறண்ட வானிலை தொடரும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று (09) காலை 6 மணி நிலவரப்படி யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் உள்ளிட்ட பகுதிகளில் 29 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
காற்றின் வேகம் குறைவடைவதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்கள் உணரும் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
கடும் வறட்சி காரணமாக அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் உள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து வருவதுடன், சில நீர்த்தேக்கங்கள் வற்றியுள்ளன.
இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பல மாவட்டங்களைப் பாதித்துள்ள கடும் வறண்ட வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இந்த நாட்களில் உடலால் உணரும் வெப்பம் அதிகரித்துள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
