Home இலங்கை வடக்கின் வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

வடக்கின் வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

0
image

வடக்கின் வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என நான் பல தடவைகள் வலியுறுத்தியுள்ளேன். இன்று கரும்பு மீள்நடுகைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையானது, எமது வளங்களை நாம் உரிய வகையில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம் என்ற நம்பிக்கையைத் தருகின்றது, என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் ‘கரும்புத்தோட்டம்’ பகுதியில் பல தசாப்தங்களின் பின்னர் கரும்புச் செய்கையை மீள ஆரம்பிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இன்று (23.06.2026) செவ்வாய்கிழமை காலை நடைபெற்றது. 

‘நாமும் கரும்பும்’ செயற்றிட்டத்தின் கீழ், விவசாயிகள், கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், கரும்புச் செய்கையாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் ‘நேச்சுரல் ரூட்ஸ்’ (Natural Roots) நிறுவனம் ஆகியவை இணைந்து கூட்டாக இதனை ஏற்பாடு செய்திருந்தன. பல தசாப்தங்களாகக் கைவிடப்பட்டிருந்த கரும்புச் செய்கையை இப்பிரதேசத்தில் மீளவும் செழிக்கச் செய்யும் நோக்கில் இந்த ஆரம்ப நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில், கரும்பிலிருந்து சர்க்கரை உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையை ஆளுநர் தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்தே ஸ்கந்தபுரத்தில் மீள்நடுகை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர், எமது விவசாயிகளில் பெரும்பாலானோர் நெற்செய்கையிலேயே அதிக ஆர்வம் காட்டுவதாகவும், கடந்த ஆண்டு ‘டித்வா’ பேரிடர் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், நெல் விளைச்சலில் மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டார். 

சிறுபோகமும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதால் சிறந்த விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், நெல்லுக்கான சந்தைப்படுத்தல் ஒரு பெரும் பிரச்சினையாகவே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டினார். 

அரசாங்கம் நிர்ணய விலையை அறிவித்து, நெற்சந்தைப்படுத்தல் சபை ஊடாகக் கொள்வனவு செய்ததன் பின்னர், தனியார் மிகக் குறைந்த விலைக்கே நெல்லைக் கொள்வனவு செய்வதாகவும், ஆனால் அதுவே அரிசியாக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்போது விலை குறைவதில்லை எனவும், இதனால் இடைத்தரகர்களே அதிக இலாபமீட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, நெற்செய்கைக்கு அப்பால் அதிக இலாபமீட்டக்கூடிய மாற்றுப் பயிர்ச்செய்கைகளை நோக்கியும் விவசாயிகள் நகர வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட ஆளுநர், கரும்புச் செய்கைக்குப் பொருத்தமான காணிகளில் அதனை முன்னெடுக்க அவர்கள் முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

மேலும், ‘நேச்சுரல் ரூட்ஸ்’ நிறுவனம் தமது ஏற்றுமதி உற்பத்திக்குத் தேவையான கரும்புகளைப் பெற்றுக்கொள்வதில் பற்றாக்குறையை எதிர்நோக்குவதனால், ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட அவர்களின் கேள்விக்கு ஏற்ப, விவசாயிகள் கரும்புச் செய்கையில் ஈடுபடுவதன் மூலம் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், கரும்புச் செய்கையில் ஈடுபடுவதன் ஊடாக 10 தொடக்கம் 12 மாதங்களில் சுமார் இரண்டரை இலட்சம் ரூபாவைத் தேறிய இலாபமாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார். 

நாம் எமது பிரதேசத்திலிருந்து மூலப்பொருட்களை அப்படியே வெளிமாவட்டங்களுக்கு அனுப்புவதை விட, பெறுமதிசேர் பொருட்களாக மாற்றியமைத்தே அனுப்ப வேண்டும் எனவும், ‘நேச்சுரல் ரூட்ஸ்’ நிறுவனம் முடிவுப் பொருளாக அவற்றை ஏற்றுமதி செய்யத் தயாராகவுள்ளதுடன், விவசாயிகளிடமிருந்து போதுமானளவு கரும்பைக் கொள்வனவு செய்யவும் முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்காக முதற்கட்டமாக 20 பேருக்கு 20 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளதாகவும், இது எதிர்காலத்தில் மேலும் விரிவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் 1960 – 1970 ஆம் ஆண்டுகளில் இந்தப் பகுதிகளில் கரும்புச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் மதிப்பளிக்கப்பட்டனர்.

இந்த விசேட நிகழ்வில் கிளிநொச்சி மேலதிக விவசாயப் பணிப்பாளர் (ஆராய்ச்சி) எஸ்.ராஜேஷ;கண்ணா, கிளிநொச்சி கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திருமதி பி.புஷ;பராணி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் விவசாயப் பொருளியல் துறை சிரேஷ;ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.சிவசங்கர், கிளிநொச்சி மாவட்டப் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் கே.பிரகாஷ; மற்றும் தூய்மை இலங்கைச் செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் மருதன் மோகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Source: https://samugammedia.com/the-resources-of-the-north-should-be-fully-utilized—northern-province-governors-statement-1782215988

NO COMMENTS

Exit mobile version