வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்கான தற்போதைய நிலைமை, முதலீடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் வாய்ப்புகள், ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், எதிர்நோக்கும் இடையூறுகள் மற்றும் தாமதங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியக் குழுவினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தனர்.
இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் ஏழாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக நாட்டுக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியக் குழுவினருக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (12.09.2026) சனிக்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளை வரவேற்ற ஆளுநர், வடக்கு மாகாணத்தின் பொதுவான நிலைமைகள், அபிவிருத்தி முன்னேற்றங்கள் மற்றும் மாகாணம் எதிர்நோக்கும் முக்கிய சவால்கள் தொடர்பில் அவர்களுக்கு விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில், வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான நிலைமை, இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம், முதலீடுகளை ஈர்ப்பதில் காணப்படும் தடைகள் மற்றும் பல்வேறு காரணங்களால் ஏற்பட்டுள்ள தாமதங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ஆளுநரிடம் கேட்டறிந்தனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் இலஞ்சம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், முதலீடுகளுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்குக் காணப்படும் வாய்ப்புகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்காக இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்தார்.
அத்துடன், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரித் திட்டங்கள் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய நலன்புரி நடவடிக்கைகள், அவற்றின் தாக்கம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்துடன் அவற்றுக்குள்ள தொடர்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், நல்லிணக்கச் செயற்பாடுகள், உலகளாவிய நெருக்கடிகளால் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், நாட்டிலிருந்து இடம்பெறும் புலம்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ஆளுநருடன் விரிவாகக் கலந்துரையாடினர்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் வடக்கு மாகாண மக்களிடையே காணப்படும் அபிப்பிராயங்கள் மற்றும் பார்வைகள் குறித்தும் பிரதிநிதிகள் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் பங்கேற்றிருந்தார்.
